இந்திய ரூபாவை பயன்படுத்தி வர்த்தகத்தை விரிவுபடுத்த இலங்கை திட்டம்!

கொழும்பின் பொருளாதார மீட்சி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்திய ரூபாவை பயன்படுத்தி தீவு நாடு இந்தியாவுடனான தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இலங்கை நெருக்கடியின் போது இந்தியா விரைவாக செயற்பட்டதாகவும், 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை தமது நாட்டுக்கு வழங்கியதாகவும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர நிகழ்வு, புதுடில்லியில் இடம்பெற்ற போது அதில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர்,

கொழும்புக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ரூபே பொறிமுறையைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தமது நாடு ஆலோசித்து வருவதாகவும், ரூபே பொறிமுறையை பயன்படுத்த தமது நாடு ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரூபே பொறிமுறையானது, இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு எளிதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியா வருமாறு இந்திய பிரதமர் மோடி முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.எனவே அவர் விரைவில் இந்தியாவுக்கு வருவார் என நம்புவதாக மொரகொட கூறியுள்ளார்.

கொழும்பின் பாதுகாப்பு புதுடெல்லியின் பாதுகாப்பு என்றும், இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணக் கலாசார நிலையம், இந்தியாவின் முக்கியமான செயற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *