நிதியில்லை என சொல்வதற்கு அரசாங்கத்திற்கு வெட்கம் இல்லையா – ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி!

அரசாங்கம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இதுவரையிலும் முன்னெடுக்காத நிலையில் பல சந்தேகங்களை அது தோற்றுவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம். மக்கள் மத்தியிலும் தேர்தலுக்கான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

ஆனால் தேர்தலை எதிர்கொள்வதில் காணப்படும் அச்சத்தினால் பல்வேறு வழகளிலும் அரசாங்கம் அதனைக் காலம் தாழ்த்த முயற்சிக்கின்றது.

தேர்தல் செலவுகளுக்கு வழங்குவதற்கு பணம் இல்லை என்று கூறுவதற்கு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.

நிதி நெருக்கடியால் தேர்தல் செலவுகளுக்கான பணத்தை வழங்குவது சிக்கல் என்று நிதி அமைச்சு நீதிமன்றத்திற்கும் அறிவித்துள்ளது. 

ஆனால் இது போன்று தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு முயற்சிகளும் வெற்றியளிக்காது.

மாறாக ஏதேனுமொரு வழியில் அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்தினால், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காகவும் சர்வதேசத்தை நாடுவோம்.

அரசாங்கம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இதுவரையிலும் முன்னெடுக்கவில்லை. இது தேர்தல் இடம்பெறுமா என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

வேதனையான எதிர்காலம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். ஆனால் அதற்கு என்ன தீர்வு என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *