
ஒழுக்க மீறலில் குற்றச்சாட்டுக் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் போட்டித் தடை விதிக்கப்பட்ட தனுஷ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகிய வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடையை இலங்கை கிரிக்கெட் சபை நீக்கியுள்ளது.
குறித்த மூன்று வீரர்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்துக்கான கிரிகெட் சுற்றுப் பயணத்தின்போது கொவிட் கட்டுப்பாட்டு விதிகளை மீறி டரம் பிரதேசத்தில் சுற்றித்திரிந்ததாக காணொளி ஆதாரங்கள் வெளியானதையடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணையை முன்னெடுத்த 5 பேர் கொண்ட குழு 3 வீரர்களுக்கும் தலா 10 மில்லியன் ரூபா அபராதமும், 1 வருட காலம் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தடையும், 6 மாத காலம் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடத் தடையும் விதித்தது.
தற்போது தடை நீக்கப்பட்டதையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மூன்று வீரர்களும் தகுதி பெறுவார்கள்.
இந்நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள சிம்பாம்வே அணிக்கு எதிரான தொடரில் இந்த மூன்று வீரர்களும் விளையாடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.