கிளிநொச்சி காணி விடுவிப்பு விரைவில் சாத்தியமாகும்! டக்ளஸ்

வனம் மற்றும் வன ஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கிளிநொச்சியில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த காணிகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிகளையடுத்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளில், கடந்த காலங்களில் பொது மக்களினால் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட போதிலும் யுத்தம் காரணமாக விவசாயம் மேற்கொள்ளப்படாத நிலையில் காடுகளாக மாறிய காணிகள் – கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை – அபிவிருத்தி பணிகளுக்காக கோரப்பட்ட காணிகள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான ஒரு இலட்சம் காணித் துண்டுகள் திட்டத்திற்காக கோரப்பட்ட காணிகள் என்று சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் தொடர்பாக இன்று பிரஸ்தாபிக்கப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய, துறைசார் அமைச்சர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், கிளிநொச்சிக்கு வருகை தந்த வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சம்மந்தப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இதனையடுத்து, கருத்து தெரிவித்த வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வனங்களின் பாதுகாப்பிற்கும் வன ஜீவராசிகளின் வாழ்விற்கும் அச்சுறுத்தலற்ற காணிகளை, பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்கு முடியும் எனத் தெரிவித்தனர்.

குறித்த நடவடிக்கைகளுக்காக, பிரதேசத்தினை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி முடிந்தளவு விரைவில் காணிகளை விடுவிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *