மன்னாரில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஆரம்பம்

மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஜனவரி மாதத்திற்குள் முடிவுறுத்தப்படவுள்ளமையால் உரிய நடைமுறைகளுடன் குறித்த திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கமக்காரர்களிடம் மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ. மரின்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (8) மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.

வயற் காணி இடாப்பு மீள்திருத்த வேலையின் பொருட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள 13 கமநல சேவைகள் நிலையங்களிலும் வயற்காணி பதிவேடுகளை விவசாயிகள் பார்வையிட முடியும்.

வயற்காணி பதிவேட்டில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கமக்காரர்கள் தங்கள் வயற்காணி அமைந்துள்ள கமநல சேவைகள் நிலையங்களில் விண்ணப்ப படிவங்களைப் பெற்று பூரணப்படுத்தி தேவையான ஆவணங்களுடன் கமநல சேவை நிலையங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் வயற்காணி பதிவைத் திருத்திக் கொள்ள முடியும்.

எதிர்பார்த்துள்ள தங்கள் காணி தொடர்பில் இதுவரை உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத கமக்காரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் காணிப் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

வயற் காணி இடாப்பு மீள்திருத்தம் தொடர்பான மேலதிக விபரங்களை தங்கள் பகுதிக்கு பொறுப்பான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் அல்லது கமநல சேவைகள் நிலையங்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஜனவரி மாதத்திற்குள் முடிவுறுத்தப்படவுள்ளமையால் சுகாதார வழி காட்டல்களுக்கமைய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இவ் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ.மரின்குமார் அனைத்து கமக்காரர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *