நாட்டில் பகல் வேளையிலும் இனி மின் தடை!

தற்போதைய பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நாளாந்தம் இரண்டரை மணித்தியாலங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்சார விநியோகத்தை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மின்சக்தி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரஹெந்தஹேவா இந்த பரிந்துரையை மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவுக்கு அனுப்பியுள்ளார்

இதன்படி முற்பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு மணி நேர மின்சார விநியோகத் தடையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வரும் உச்ச நேரங்களில் 45 நிமிடங்களுக்கு இரண்டு முறை மின்சார விநியோகத்தடையும் அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடி காரணமாக அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதில் இருந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலகியுள்ளது.

அத்துடன் நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகு மற்றும் கெரவலப்பிட்டி யுகதனவி ஆலையின் ஒரு பகுதி பராமரிப்புக்காக மூடப்பட்டமை மற்றும் களனிதிஸ்ஸ 115 மெகாவாட் எரிவாயு விசையாழி ஆலையில் ஏற்பட்ட பழுதினால் மின்சார விநியோகத்தடையை அமுல்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ள நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3வது அலகிலிருந்து 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

அதேபோன்று, கெரவலப்பிட்டிய 300 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் யுகதானவியின் ஒரு பகுதி, திட்டமிடப்பட்ட பராமரிப்பு காரணமாக கடந்த மாதம் முதல் இயங்கவில்லை.

இது தேசிய மின்னுற்பத்திக்கு 150 மெகாவாட்டை மட்டுமே வழங்குகிறது. இந்தநிலையில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகு இந்த மாத இறுதிக்குள் இயங்கும் என்றும் யுகதனவி இந்த மாத நடுப்பகுதிக்குள் முழுமையாக இயங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் தொழில்நுட்ப பிரச்சினை எப்போது தீர்க்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *