
தோட்ட சேவையாளர்களுக்கு எதிராக கம்பனிகள் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த வழக்குக்கு தமது பக்கம் உள்ள நியாயத்தினை சத்தியக்கடதாசி மூலம் நீதி மன்றத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் எஸ்.பி.சந்திரமதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் 1,200 உறுப்பினர்களிடம் சத்தியபிரமாண கடிதங்களுக்கு ஒப்பமிடும் நிகழ்வு இன்று மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத தேவஸ்த்தான கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தோட்ட சேவையாளர்களுக்கு யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறி கம்பனிகள் அடாவடித்தனத்தில் ஈடுப்பட்டு வருகின்றன, இந்த அடாவடித்தனங்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் நியாயம் கிடைக்காத பட்சத்தில் தங்களது சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
கேகலை, மஸ்கெலியா மற்றும் நமுனுகுல பிரதேசங்களில் உள்ள 18 தோட்டங்களில் பணி புரியும், எமது தோட்ட சேவையாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் சேவைகால கொடுப்பனவு உள்ளிட்ட பல கொடுப்பனவுகள் ஆப்பிகோ கம்பனியினால் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக நாங்கள் பிரதேசங்களில் காணப்படும் தொழில் திணைக்களில் 14 முறைப்பாடுகள் முன்வைத்துள்ளோம். இந்த முறைப்பாட்டினை தொடர்ந்து அந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அதனை எதிர்த்து சேவையாளர்களுக்கு எதிராக கம்பனிகள் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குக்கு எமது பக்கம் உள்ள நியாயத்தினை எடுத்துக்காட்டுவதற்காகவே நாங்கள் இன்று சத்தியக்கடதாசி மூலம் நீதி மன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கடந்த காலங்களிலும் எங்களது இந்த உரிமையினை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு வேலை நிறுத்தப்போராட்டங்களில் ஈடுப்பட்டிருந்தோம் இனி வரும் காலங்களிலும் நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் எமது சங்கத்தின் உயர் மட்டக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தோட்ட சேவையானளர் சங்கம் நடத்திய இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு பொருளாளர் நிசாந்த வண்ணியாரச்சி, கிளை தலைத்தவர். ஸ்ரீராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.