தட்டுப்பாடு இருந்தாலும் விநியோகம் நடைபெறும்!

யாழ்ப்பாண குடாநாட்டில் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருள்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என்று யாழ் வணிகர் கழகத்தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்தார்
வணிகர் கழகத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் நாட்டில் படிப்படியாக சில பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தந்த நிறுவனங்கள் விநியோகத்தை மட்டுப்படுத்தியதன் காரணமாக பால் மா, எரிவாயு சிலிண்டர், கோதுமை மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புகள் காரணமாக மீளப்பெறப்பட்டு அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 60 = 70 வீதமான கோதுமை மா விநியோகம் தற்போது சீராகி வருகிறது. பாண் மற்றும் பணிஸூக்கு மாத்திரம் போதுமான அளவுக்கு கோதுமை மா வெதுப்பகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. பால்மா விநியோகமும் இந்த மாத இறுதியில் சீரடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நெல்லின் விலை அதிகரித்ததால் உள்ளூர் நாட்டரிசி 160 ரூபா வரை விற்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் அரிசி 130 = 140 ரூபா வரையும் கீரிசம்பா 190 =200 ரூபா வரை விற்கப்படுகின்றது. உள்ளூர் அரிசிகளின் விலை தைப்பூசத்துக்குப் பின்னர் சற்று குறைவடையும் சாத்தியக்கூறுகள் உள்ளது. 15 = 20 ரூபா வரை இந்த விலை இறக்கம் ஏற்படலாம். ஆனால் நெல் உற்பத்தியில் உரத் தட்டுப்பாடு மழையின்மை போன்றவற்றால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றது.

உளுந்து, பயறு, எள்ளு மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்ச்செய்கைகளில் விவசாயிகள் ஈடுபடவேண்டும். அரசு உளுந்து இறக்குமதிக்கு தடை விதித்துள்ள நிலையில் எல்லோரும் உளுந்தை அதிகளவில் உற்பத்தி செய்ததால் விலை வெகுவாக குறைந்துள்ளது=என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *