
யாழ்ப்பாணம் இலங்கையின் வடக்கில் இருக்கின்றது. எந்த நாட்டிற்கும் தெற்கில் இல்லை என சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
The island பத்திரிகை எழுப்பிய கேள்விகளிற்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான தனது விஜயம் மற்றும் யாழ்ப்பாண தீவுகளில் மின்சக்தி திட்டம் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ள சீன தூதுவர் கொவிட் நிலவரம் காரணமாகவே யாழ்ப்பாணத்திற்கான தனது விஜயம் தாமதமானது என தெரிவித்துள்ளார்.
மூன்று தசாப்தகால யுத்தம் வெற்றிகரமாக முடித்துவைக்கப்பட்ட பின்னர் வடபகுதிக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து சீனா ஆர்வமாக உள்ளது எனவும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு இரகசிய நிகழ்ச்சி நிரல் உள்ளது என்பதை நிராகரித்துள்ள தூதுவர் வடபகுதி மின்திட்டங்களை இரத்துச்செய்வதால் இலங்கைக்கு பாரதூரமான பாதிப்பு ஏற்படலம் என தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் முன்னெடுக்கப்படும் திட்டத்தை சீனாவின் தனியார் துறையினர் கேள்விப்பத்திர முறை மூலம் பெற்றுக்கொண்டனர். சீன தூதுரகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளிக்காமல் பல நாடுகள் பின்வாங்கிய போது சீனா இலங்கைக்கு அவசியமான ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடந்த காலங்களில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது என தெரிவித்துள்ள தூதுவர் தற்போதைய நிதி நெருக்கடி நிலவரம் தற்காலிகமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.