
அரசின் நடவடிக்கையால் நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மருந்து மதிப்பீடுகளுக்கு பொருத்தமான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான கடன் கடிதங்கள் வழங்கப்படாததால், சுமார் 80 வகையான மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான மருந்து மதிப்பீடுகள், வழக்கமாக முந்தைய ஆண்டின் ஜனவரியில் வரையப்பட்டு, கேள்வி கோரல் செயல்முறை முடிந்த பின்னர் ஓகஸ்ட் மாதத்தில் கொள்முதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு, தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு கடன் கடிதம் வழங்கப்பட்டு சுமார் நான்கு மாதங்களுக்கு பின்னர், ஜனவரி மாதத்திற்குள் மருந்துகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படும்.
எனினும், 2022 ஆம் ஆண்டிற்கான கடன் கடிதங்கள் வழங்கப்படாததால், அத்தியாவசிய மருந்துகளை ஆர்டர் செய்யும் செயல்முறை ஏற்கனவே சுமார் நான்கு மாதங்கள் தாமதமானது.
கொரோனாத் தொற்றுநோயால் ஏற்பட்ட எதிர்பாராத அளவுக்கதிகமான மருந்துகள் இல்லாவிட்டால், நாட்டில் இப்போது கடுமையான மருந்துத் தட்டுப்பாடு இருந்திருக்க வேண்டும்.
ஆனால் எதிர்காலத்தில் சரியான நிர்வாகம் செய்யப்படாவிட்டால், நாட்டில் கடுமையான மருந்து தட்டுப்பாடு தவிர்க்க முடியாதது என தெரிவித்துள்ளார்.