சஜீத் சிகிரியா மலையினை தங்கமாக மாற்றினால் தான் எதிர்காலத்தில் தலைவராக வர முடியும்! அஹமட் புர்கான் கிண்டல்

எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாச சிகிரியா மலையினை தங்கமாக மாற்றினால் தான் எதிர்காலத்தில் நாட்டின் தலைவராகவோ அல்லது உச்ச அதிகாரம் படைத்தவராகவோ வர முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் செவ்வாய்க்கிழமை(11) இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமையை பயன்படுத்தி எதிர்கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் எதிர்கட்சி தலைவரும் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கூட வீட்டுக்கு ஒரு பட்டதாரி நியமனம் என்ற அடிப்படையில் ஏறத்தாழ அரசாங்கமானது 51 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்திர நியமனத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது போன்று மீண்டும் பொருளாதாரத்தை மறுசீரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கின்றது.

எனவே மக்கள் அவதானமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்.தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்குடன் உச்ச அளவில் எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாச பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்.

உண்மையில் அவர் சிகிரியா மலையினை தங்கமாக மாற்றினால் தான் எதிர்காலத்தில் நாட்டின் தலைவராகவோ அல்லது உச்ச அதிகாரம் படைத்தவராகவோ வர முடியும்.

அந்த வகையில் அரசாங்கமானது நாட்டின் பொருளாதார நிலைமையினை கருத்தில் கொண்டு செயலாற்றி வருகின்ற நிலையினை அவர் உணர வேண்டும்.

இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.இன்னும் 20 வருடங்களுக்கு இந்த அரசாங்கம் நிலைத்து நிற்கும் என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.

அத்துடன் முஸ்லீம்களின் விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மதியாபரணம் சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.

அம்மக்களுக்காக நிறைய முஸ்லீம் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள்.அவர்கள் அம்மக்களின் பிரச்சினைகளை பார்த்துக்கொள்வார்கள்.

அதே போன்று இனவாத கருத்துக்களை தெரிவிப்பதில் இருந்து தமிழ் கூட்டமைப்பு போன்ற ஏனைய கட்சிகளும் அதில் இருந்து மீள வேண்டும்.

மக்களும் இந்த அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்து செல்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *