
சேவை நாடிவரும் மக்களுடைய தேவைகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வைப்பதற்கு முடியுமான முயற்சிகளை மேற்கொள்ள அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட அரச அதிபர் சமன்தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
பட்டதாரி பயிலுனர்களக நியமிக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் மூன்றுக்கான நிரந்தர நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று(12)மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், அரச சேவையில் நியமனம் என்பது எல்லோருக்கும் கிடைக்கப் பெறாத ஒரு விடயமாக காணப்படுகின்றது.
கிடைக்கப்பெற்ற நியமனத்தை கடமைப்பட்டியலின்படி வழங்கப்பட்ட பொறுப்புக்களை சரியாகவும் நேர்த்தியாகவும் மேற்கொள்ளல் வேண்டும். மக்களுக்கு அவசியமான ஒரு சேவையாக அரச சேவையை மாற்றியமைக்க வேண்டும்.
மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு இணைப்பு செய்யப்படும் தாங்கள் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை மேற்பார்வை செய்து அவற்றை சிறப்பான திட்டங்களாக மாற்றியமைக்க ஆவண செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்திற்கு என மொத்தமாக 84 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனக்கடிதம் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
மேலதிக அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், அ மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ். பரமேஸ்வரன் ,மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய உட்பட பலரும் கலந்து கொண்டனர்.