
திருகோணமலையிலிருந்து அம்பாறை நோக்கியதாக லொறியொன்றில் மாடுகளை நெருக்கமாக கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் லொறியில் இருந்த 16 மாடுகளுடன் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை மூதூர் -திரிசீடி சந்தியில் வைத்து, குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மாடுகளுடன் பயணித்த குறித்த லொறியினை மறித்து சோதனைக்குட்படுத்திய போது மாடுகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி , 16 மாடுகளையும் நெருக்கமாகவும், உணவு வழங்கப்படாமலும் கொண்டு சென்றமைக்காக இவ் கைது நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது லொறியில் இருந்த 16 மாடுகளும் மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட லொறியின் சாரதியை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.