இழுவைப் படகு மூலம் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி கற்பிட்டியில் ஆர்ப்பாட்டம்

புத்தளம் – கற்பிட்டி ஆழ்கடல் பகுதியில் இன்று முதல் மீன்பிடிப்பதற்காக இழுவைப் படகுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி கற்பிட்டி ஆணவாசல் இறங்குதுறை பகுதியில் நேற்று மாலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

கற்பிட்டி பகுதியிலுள்ள ஐந்து மீனவச் சங்கங்களின் உறுப்பினர்கள் இணைந்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, ‘எமது கடல் வளங்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’, ‘இழுவை படகுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இன்றே இரத்துச் செய்’, ‘இலஞ்சம் வாங்கிவிட்டு இழுவைப் படகுத் தொழிலுக்கு அனுமதி வழங்காதே’, ‘சிறு கடல் தொழிலாளர்களும் வாழ வேண்டும் ‘ என பல கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.

அத்தோடு, நாட்டில் டொலர் இல்லை என கூறுகிறார்கள். எனினும், கற்பிட்டி கடலில் டொலர்கள் இருக்கிறது என ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த காலங்களில் கற்பிட்டி கடலில் அதிகமான இறால்கள், நண்டுகள் பிடிக்கப்பட்டு அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், இன்று நமது நாட்டில் விற்பனை செய்வதற்கு கூட இறால்கள் இல்லை.

தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமையே இதற்கு காரணமாகும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த இழுவை படகுகள் மூலம் மீன்பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும், தடைவிதிக்கப்பட்ட 23 நாட்களின் பின்னர் இன்று (24) முதல் மீண்டும் அந்த இழுவை வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு கடற்தொழில் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கேள்விப்பட்டோம்.

தடைசெய்யப்பட்ட இந்த 23 நாட்களில் கற்பிட்டி பூக்குளம், பல்காஹத்துறை, வன்னிமுந்தல், சேராக்குளி, கங்கேவாடி, கோயில்முனை, உச்சிமுனை, பத்தலங்குண்டு போன்ற பல மீனவக் கிராமங்களில் வாழும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான சிறுபடகு மீனவத் தொழிலாளர்கள் சிறந்த முறையில் தமது மீன்பிடித் தொழிலை முன்னெடுத்து வந்தனர்.

எனினும், தற்போது 23 இழுவைப் படகுகளுக்காக இந்த 2,000 இற்கும் அதிகமான குடும்பங்கள் மீண்டும் மீன்பிடித் தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகவும், எரிபொருள் விலையேற்றம் காரணமாகவும் மீனவத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

எனவே, எமது கடல் வளத்தையும், சிறுகடல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதுடன், இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை வலை மீன்பிடித் தொழிலுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீன்பிடி அமைச்சர் ஆகியோர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *