
கொழும்பு, ஜனவரி 24: மின்வெட்டை அமல்படுத்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே திங்கள்கிழமை தெரிவித்தார்.
நாடு முழுவதும் திங்கள்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் திங்கள்கிழமை காலை அறிவித்திருந்தது. நாட்டின் அனைத்துப் பாகங்களிலும், சுழற்சி முறையில் திங்கள் மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என அச்சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்திருந்தார். ஆனால், இந்த மின் துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை எவ்வித அறிவிப்பையும் வெளியிட்டிருக்கவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான அவசரக் கலந்துரையாடல் இன்று மதியம் இடம் பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள், இலங்கை மின்சார சபை பணியாளர்கள் உள்ளிட்டோர்
பங்கேற்றிருந்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக அமைச்சர் காமினி லொக்குகே கூறுகையில் ” நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாடு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். இதன்போது, மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய மின்சக்தி நெருக்கடிக்கு மின்வெட்டை அமல்படுத்தாமல் தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். இது தொடர்பாக மத்திய வங்கி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி முக்கிய சில தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். மின் வெட்டு தொடர்பாக சில தொழில் சங்கங்கள் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். கடந்த வாரம் 24 மணி நேர மின்வெட்டு ஏற்றப்படும் என்று சில தொழில் சங்கங்கள் கூறியிருந்தன. ஆனால், கடந்த வாரம் மின்தடை ஏற்படவில்லை. நாங்கள் பொதுமக்களை விட்டு ஓடிவிடவில்லை. மின்வெட்டை அமல்படுத்தாமல் இருப்பதற்கான வழிகளை மேற்கொள்வோம்.
நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள சில மின் தடைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆராய நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின்
அறிக்கை கிடைத்தவுடன் இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, அரச அமைப்புகள், திணைக்களங்களுக்கு இடையே எவ்வித பிரச்சினைகளும் இல்லை. ஆனால், நாடு டொலர் நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. இலங்கை மட்டுமல்ல, கரோனா தொற்றால் முழு உலகமுமே டொலர் நெருக்கடியை எதிர்கொள்கிறது.
முன்னர் போன்று எந்தவொரு பொருளையும் கொள்வனவு செய்வதற்கு கடன் பத்திரங்களை திறக்க முடியாது. மத்திய வங்கிக்கு தேவையான டொலர்களை செலுத்திய பின்னரே கடன் பத்திரங்களை திறக்க முடியும். பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி விரைவில் 5% ஆகக் குறைக்கப்படும் என மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அனல் மின் நிலையங்கள் முழுக் கொள்ளளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும் அது நாட்டின் 70 வீத தேவையை மட்டுமே பூர்த்தி செய்வதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மீதமுள்ள 30 வீதம் நீர் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் பெறப்பட வேண்டும்.
நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங் களின் நீர் மட்டம் பெரியளவில் குறைவடைந்து வருவதாகவும், இவ்வாறான நிலையில் நீர் மின் உற்பத்தி 5% ஆக குறைவதாகவும் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.