
கம்பஹா, ஜனவரி 24: இலங்கையில் டிஜிற்றல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் டிஜிற்றல் பணப்பை மென்பொருளை அறிமுகம் செய்யப்படும் என்று இளைஞர் விவகார அமைச்சரும் டிஜிற்றல் உள்கட்டமைப்புக்கான இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கையடக்க தொலைபேசி மூலம் பணத்தை செலுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட LANKA QR குறியீட்டை கம்பஹாவில் மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் ” கடவுச்சீட்டு, பிறப்பு, விவாகச் சான்றிதழ்கள், பரீட்சைப் பெறுபேறுகள் உள்பட அத்தியாவசிய தனிப்பட்ட ஆவணங்களை தமது கைத்தொலைபேசியில் களஞ்சியப்படுத்துவதற்கான டிஜிற்றல் கட்டமைப்பு வசதியும் இதன் மூலம் கிடைக்கும்.
கொரோனா வைரஸ் எதிர்பாராத நேரத்தில் வந்த ஒரு தொற்று நோய். தற்போதைய தலைமுறையினரோ அல்லது முந்தைய தலைமுறையினரோ உலகளாவிய தொற்று நோயை எதிர்கொள்ளவில்லை. உலகில் கைத்தொழில் புரட்சி, தொழில்நுட்பப் புரட்சி ஆகியன தொற்று நோய்களுடன் இணைந்துள்ளன. இந்தத் தொற்றுநோயை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.