வியாழேந்திரன் வீட்டிற்கு முன் இளைஞன் படுகொலை தொடர்பில் விசாரணை செய்ய நீதிமன்றில் சுமந்திரன்..!

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னாள் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட போது அமைச்சர் தனது வீட்டிலே இருந்தார் என்றும் அதற்கு பின்னர் தான் அவர் அங்கிருந்து வெளியேறி சென்றார் என்ற சாட்சியங்கள் சம்மந்தமாகவும் சம்பவம் தொடர்பாக அவருடைய தொலைபேசியிலிருந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தது தொடர்பாக விசாரிக்வேண்டும் என நகர்த்தல் பத்திரம் மூலம் நேற்று திங்கட்கிழமை (24) நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி இராஜாங்க அமைச்சரின் வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் மாகாலிங்கம் பாலசுந்தரம் தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுக்கொள்ளப்பட்டது.

இதில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் சார்பில் சட்டத்தரணி கமலாநாதன், ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் ஆகியோர் ஆஜராகிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த படுகொலை தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் உகந்த முறையில் இதற்கு விசாரணை செய்யவில்லை என்ற காரணத்தினால் ஏறாவூர் பொலிசாருக்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது.

படுகொலை செய்யப்பட்டவரின் தந்தை, தாய் சார்பாக சட்டத்தரணி கமலதாஸ் உடன் நான் நீதிமன்றில் ஆஜராகி இந்த வழக்கை வேறு ஒரு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றுமாறு விண்ணப்பித்தபோது ஏறாவூர் பொலிசார் உகந்த முறையில் விசாரணை செய்யவில்லை என ஏற்கனவே இது இரண்டாம் தடவையா கரடியனாறு பொலிசாருக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்தார்.

அதேவேளை நீண்ட நாட்களாக சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை வராமல் இருந்த முறைப்பாட்டையும் செய்தோம் அது சில நாட்களுக்கு முன் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது அதன் பிரதியை பெற்றுக் கொள்ளலாம் என நீதவான் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்தபோது குறித்த அமைச்சர் தனது வீட்டிலே இருந்தார் என்றும் அதற்கு பின்னர் தான் அவர் அங்கிருந்து வெளியேறி சென்றார் என்ற சாட்சியங்கள் சம்மந்தமாக விசாரிக்கவேண்டும்.

அத்தோடு இந்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததே அமைச்சர் தான்.

அவர் தன்னுடைய தொலைபேசியிலிருந்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கொடுத்ததாக நீதிமன்றத்தில் பதிவாகியிருக்கிறது.

ஆகையினால் அந்த தொலைபேசி அந்த நேரத்திலே எங்கிருந்தது என்பது இலகுவாக விசாரித்து அறியக்கூடிய ஒரு விடையம் அது மட்டக்களப்பில் இருந்தா அல்லது கொழும்பில் இருந்த அந்த அழைப்புச் சென்றதா? என இலகுவாக அறிய முடியம்.

ஆகவே அதனையும் விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.

இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஊடாக இந்த வழக்கு நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்டமையினால் குறித்த பொலிசார் மன்றில் ஆஜராகியில்லாத காரணத்தால். அடுத்த தினமான பெப்ரவரி 2ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது இந்த விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறும் அந்தவேளையில் குறித்த உத்தரவை தான் பிறப்பிப்பதாகவும் நீதவான் குறிப்பிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *