சஜித்தும், சம்பிக்கவும் இணைந்து செயல்பட வேண்டும்: தமுகூ தலைவர் மனோ கணேசன்

கொழும்பு, ஜனவரி 25: இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் தமக்கிடையிலான முரண்பாடுகளை மறந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் (தமுகூ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஊழல் எதிர்ப்பு குழு அங்கத்தவர்களை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பு சாட்சியம் அளித்து விட்டு, மனோ கணேசன் எம்பி அளித்த பேட்டி: வழமையாக அரசாங்கங்கள் பதவிக்கு வரும். பின்னர் அது விழும். அதையடுத்து புதிய அரசாங்கம் பதவிக்கு வரும். அதுவும் விழும். இன்னொரு அரசாங்கம் வரும். இதுவே வழமை.

ஆனால், இன்று அரசாங்கம் விழுவதற்கு முன்பு நாடு விழுந்து விட்டது. அண்டை நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி கைமாற்று வாங்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பெருங்கடன்களின் மீள் செலுத்தும் தொகையை செலுத்தி காலத்தை ஓட்டும் நிலைமைக்கு நாடு விழுந்து விட்டது.

ஆகவே புதிதாக கட்டி எழுப்ப வேண்டியது புதிய அரசாங்கம் என்பதை விட, புதிய நாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகவே இன்று இந்நாட்டின் அரச எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் கரங்கோர்க்க வேண்டும். அதற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும், பாடலி சம்பிக்க ரணவக்கவும் கரங்கோர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *