
கொழும்பு, ஜனவரி 25:
வெகுஜன ஊடகத்துறை அமைச்சகத்துக்கு உள்பட்ட அரசாங்க அச்சகத்தில், அகற்றப்பட்ட கடதாசி விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் மூலம் தினம்தோறும் சுமார் 2,500 டன் கடதாசி கழிவு அகற்றப்படுகின்றது.
இந்தக் கடதாசிக் கழிவுகள் விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசாங்க அச்சக தொழிற்சங்கம் உள்ளிட்டவை குற்றம் சாட்டியிருந்தன. இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் வினவினார். அதற்கு அமைச்சர் அளித்த பதில்:
கடதாசிக் கழிவுகள் விற்பனையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அச்சக திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தெமட்டகொட போலீஸாரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சும் இந்த விவகாரம் தொடர்பாகத் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முறைகேடு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்கங்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், இந்த விஷயத்தில் தலையிட்டமைக்காக அரசாங்க அச்சக தொழிற்சங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.