
கொழும்பு, ஜனவரி 25:
நாட்டில் தற்போது அடையாளம் காணப்படுகின்ற கொரோனா நோயாளிகளில் 50 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபினை உடையவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: நாட்டில் தற்போது தினம்தோறும் சுமார் 800-க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. இந்த சூழல் மிகவும் ஆபத்தானது.
மக்கள் தாங்கள் செல்லும் பிரதேசங்களில் குறைந்தது ஒருவருக்கேனும் கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
நாட்டில் தற்போது கொரோனா அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் அதிகளவில் அடையாளம் காணப்படுகிறார்கள்.
இவர்களில் அதிகமானவர்களுக்கு ஒமிக்ரோன் திரிபே உள்ளது. அவர்களில் சிலர் டெல்டா திரிபையும் கொண்டிருக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.