
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் அதனால் ஏற்படும் உளநல கேடுகள் தொடர்பிலான செயலமர்வொன்று இடம்பெற்றது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்த குறித்த செயலமர்வு நேற்று மாலை தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
வைத்தியர் வீ.ஜீவராஜின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், மதுபாவனை, போதைப் பொருள் வகைகள் இதனால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் இதனை முற்பாதுகாப்பு நடவடிக்கையின் ஊடாக எவ்வாறு தடுக்கலாம்.
இதன் மூலம் பாதிப்படைந்தவர்களை அரச புனர்வாழ்வு சிகிச்சைக்கு அனுப்புதல் உள்ளிட்ட பல விடயங்களை இதன்போது கலந்து கொண்ட கந்தளாய் வைத்தியசாலையின் சமூக உளநல மருத்துவர் டொக்டர் நடீப் பி. குணரத்ன தெளிவுபடுத்தினார்.
போதைப் பொருள் பாவனை மூலமாக பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட கிளினிக் சிகிச்சை இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்த வைத்தியர் திருகோணமலை பொது வைத்தியசாலை, கந்தளாய், கிண்ணியா, மூதூர், தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைகளிலும் இவ்வாறான சிகிச்சை இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
களத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் போதைப் பொருள் பாவனையாளர்களை இணங்கண்டு அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இதற்கான சிகிச்சை ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் கிழமை காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை இடம் பெற்றுவருவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தின் வைத்தியர் டொக்டர் வீ.ஜீவராஜ் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் டொக்டர் வி.பிரேமானந்த், உளநல சிகிச்சை பிரிவு மருத்துவர் வி.ஸ்ரீ கௌரிஸ்வரன், மருத்துவ மாதுக்கள்,வெளிக்கள பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
