
கொழும்பு, ஜனவரி 26: நாட்டின் மற்றைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது என்று ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட்-19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை கூறியது: ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கம்பஹா மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது. கம்பஹாவிற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் அதிகளவானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் ஓமிக்ரான் திரிபால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம். கொரோனா தொற்றுக்குள்ளாகிய பெரும்பாலானவர்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லை. இந்த அறிகுறியற்ற தொற்று வயதானவர்கள், தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
நாட்டில் முடக்க நிலை இல்லாமல், நாளாந்த செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் நடமாடத் தொடங்கியுள்ளனர். இதனால், கொரோனா வைரஸ் மேலும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 10% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், கொரோனா நோயாளிகளுக்கான ஒட்சிசன் தேவை 08% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்கத் தவறியதால் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. திருமண நிகழ்ச்சிகளால் கொரோனா பரவல் அதிகரிக்கிறது.
மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.