ஓய்வு பெற்றார் தில்ருவான் பெரேரா

கொழும்பு, ஜனவரி 26:

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு (SLC) அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், சர்வதேச கிரிக்கெட் பயணத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கான நேரம் இது என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இன்னும் சிறிது காலம் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

39 வயதான தில்ருவான் பெரேரா, கடைசியாக 2021 ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக காலியில் நடந்த போட்டியில் விளையாடினார்.

குறைந்த போட்டிகளில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் தில்ருவான் ஆவார்.

தனது 25வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக, 27 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை முரளிதரன் வீழ்த்தியிருந்தார். இந்த சாதனையையே தில்ருவான் முறியடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *