ராஜபக்சக்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! – சஜித் சூளுரை

ராஜபக்சக்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டும் நிலைக்கு நாட்டு மக்கள் வந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு’ மற்றும் ‘ஜனசுவய’ ஆகிய நிகழ்ச்சித் திட்டத்துடன் ஒன்றிணைந்தாக பொரலஸ்கமுவ வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு இன்று ஓட்டோ வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசின் வேலையை அரசு செய்வதும், எதிர்க்கட்சிகள் எதிர்கட்சிகளின் வேலைகளைச் செய்வதுமே பொதுவாக நடப்பதாக இருந்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காகப் பாரம்பரிய எதிர்க்கட்சி என்ற வகிபாகத்தைப் புரட்டிப் போட்டுள்ளது.

நாட்டின் அனைத்து வளங்களையும் விற்று, மக்களைத் துன்பத்துக்கு மேல் துன்பத்தை ஏற்ப்படுத்துவதையே அரசு செய்து வருகின்றது என்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து நாட்டுக்குப் பெறுமானம் சேர்க்கும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றது.

அந்தப் பணியில் இணைந்து, மக்களுக்குச் செய்யக்கூடிய சேவையை செயலில் நிரூபிக்க வேண்டும் என அதிகாரத்தைப் பெறக் கனவு காணும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அவ்வாறு செய்யாமல் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை.

கொரோனா பேரிடர் காரணமாக உலகம் முழுவதும் வறுமையின் அடிமட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கும் போதிலும் உலகின் பத்து பெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் அதிகரித்துள்ளன. இலங்கையிலும் இதே நிலைதான் உள்ளது.

நாட்டில் உள்ள அரச சொத்துக்களை விற்பனை செய்வதே இப்போது நடப்பதாக இருந்தாலும், நாட்டுக்குப் பெறுமானம் சேர்ப்பதையே நாங்கள் செய்கின்றோம் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *