
யாழ்ப்பாணம், ஜனவரி 27:
‘தீவகத்தில் பசுக்களை பாதுகாப்போம்’ என்ற கருப்பொருளிலான கலந்துரையாடலொன்று இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், தீவக சிவில் சமூகம் ( islands civil society ) அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் ஆகியோரின் ஏற்பாட்டில் தீவகம் தெற்கு ( வேலணை) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலுக்கு யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் தலைமை வகித்தார்.
இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலாளர் , கிராமசேவகர்கள் , வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், செல்லப்பா பார்த்தீபன், ஆ.கோபாலகிருஸ்ணன் ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் தா. ரெஜினா, தீவக சிவில் சமூக செயலாளரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான மாணிக்கவாசகர் இளம்பிறையன் மற்றும் முப்பதுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில், பண்ணைகளை அமைத்து பசுக்களை பாதுகாக்க புலம்பெயர் ஒன்றியங்கள், பொது அமைப்புக்கள், கோயில் நிர்வாகங்கள் முன்வரவேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டடது. மேலும், ஏற்கனவே அதனை நடைமுறைப்படுத்தியுள்ள அனலைதீவு புளியந்தீவு நாகேஸ்வர் ஆலய நிர்வாகத்தினருக்கும், பசுப்பண்ணை அமைக்கும் செயற்பாடுகளை விரைவில் தொடங்கவுள்ள புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கும் இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது