
கொழும்பு, ஜனவரி 27:
வரும் ஜனவரி 31 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மின்வெட்டு அமல்படுத்தப்படாது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறுகையில் ” ஜனவரி 31 ஆம் திகதி வரையான எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டை அமல்படுத்துவதில்லை எனத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாளை (28 ஆம் திகதி) மாலை 06.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரையான நேரத்தில், சிறிய அளவில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்பார்க்கிறோம். இக் காலப்பகுதியில் நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வியாழக்கிழமை காலை அறிவித்திருந்தது.
இதற்கமைய,தற்போது, கையிருப்பில் உள்ள எரிபொருளின் அடிப்படையில் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இந்தியாவிடமிருந்து பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்யம் வகையில், இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் கடனுதவியை வழங்குவதற்கு இந்தியா வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.