
புதுதில்லி, ஜனவரி 28: உத்தர பிரதேச மாநிலத் தேர்தல் இந்தியாவின் எதிர் காலத்தை நிர்ணயிக்கவுள்ள தேர்தல் என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில், அடுத்த மாதம் 10-ம் திகதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு ஆளும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து இந்திய மத்திய அமைச்சர்கள் பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கியமாக இந்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. முன்னாள் தலைவருமான அமித்ஷாவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், மதுராவின் பிராஜ் பகுதியில் வாக்காளர்கள் மத்தியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் வளர்ச்சி அடையவில்லை என்றால் ஒட்டுமொத்த இந்தியாவும் பின்தங்கும். எனவே, உத்தர பிரதேச தேர்தல்தான் இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தல் ஆகும்.
சமாஜ்வாதி ஒரு இனத்தினருக்காகவும், பகுஜன் சமாஜ் மற்றொரு இனத்தினருக்காகவும் பணியாற்றி இருக்கின்றன. ஆனால் முதல்முறையாக உத்தர பிரதேசத்தில் ஒட்டுமொத்த அளவில் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. இதன்மூலம் எந்தக் கட்சி அல்லது தத்துவம் மாநிலத்துக்கு தேவை என்பதை இந்த தேர்தல் சொல்லும்.
உத்தர பிரதேசத்திலும் அகிலேஷ் யாதவ் தொடர்பான நபர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக இருக்கும் யோகி ஆதித்யநாத் அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனவே வரும் தேர்தலிலும் பா.ஜ.க.வை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.