
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த ஒரு ஊழியரின் மாதச் சம்பளத்தை விட நான்கு வருட பட்டப்படிப்பை முடித்த தாதிய உத்தியோகத்தரின் தற்போதைய சம்பளம் குறைவாக உள்ளதாக சுகாதார வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
மேலும், தாதியர்களின் தற்போதைய நிலைக்கு சுகாதார தொழிற்சங்கங்களின் தலைவர்களும் பொறுப்பு.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தாதியர்களின் போராட்டத்தை கண்டித்ததையும் அவர் விமர்சித்தார்.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளில் தலையிட முற்பட்ட போதிலும் தாதியர்களின் போராட்டத்திற்கு அவர் ஆதரவளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தற்போது உபவேந்தராக உள்ள போதிலும், அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் காரணமாகவே அரசியல் வட்டாரத்தில் முக்கிய நபராக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே தற்போது தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொறுப்பும் அவருக்கு உள்ளது என்றார்.