கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய பூசையில் நாமும் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டும்! தமிழக மீனவர் கோரிக்கை

தமிழக மீனவர்கள் கட்டிய கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய பூசையில் நாமும் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கச்சத்தீவு திருவிழா மார்ச் மாதம் 11, 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், திருவிழா செல்வது குறித்து தமிழக பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது.

இராமேஸ்வரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் தலைமையில், பாம்பன் நாட்டுப்படகு சங்க தலைவர்கள் ஏ.ஜெரோமியாஸ், ஏ.கே.அடைக்கலம் மற்றும் எஸ்.ஆர்.ரூஸ்வெல்ட் ஆகியோர் முன்னிலையிலும் இக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயம் தமிழக பாரம்பரிய மீனவர்கள் கட்டி வழிபட்டு வந்த ஆலயம். எனவே கச்சத்தீவு ஆலய திருவிழாவிற்க்கு தமிழக பாரம்பரிய மீனவர்கள் குடும்பத்துடன் செல்வது வழக்கம்.

இலங்கை உள்நாட்டு போர் நடந்த காலகட்டத்தில் கூட கச்சத்தீவு திருவிழாவிற்கு குடும்பமாக சென்று வழிபட்டு வந்துள்ளோம்.

இந்த ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி இந்திய திருப்பயணிகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழா இருநாட்டு மக்களின் நல்லுறவை பேணும் திருவிழா. இரு நாட்டு மீனவர்களிடையே சிறு சச்சரவுகள் உள்ள சூழ்நிலையில் கச்சத்தீவு திருவிழாவில் இருநாட்டு பாரம்பரிய மீனவர்கள் சந்தித்து பரஸ்பரமாக பேசி தீர்க்க வாய்ப்பாக அமையும்.

இந்த ஆண்டு 2022 மார்ச் 11, 12 ஆம் திகதிகளில் நடைபெறும் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவிற்கு கொரோனா விதிகளை கடைப்பிடித்து 200 பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் செல்ல தகுந்த நடவடிக்கைகள் எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1974 ஆம் ஆண்டு கச்சதீவு ஒப்பந்த ஆறு சரத்தை மீறி இலங்கை கடற்படை சிறைப்படுத்திய இந்திய மீன்பிடி படகுகளை, இலங்கை அரசு ஏலம் விடும் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

இலங்கை அரசு இந்திய மீனவர்கள் படகுகளை ஏலம் விடுவதை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசு இலங்கை வசம் உள்ள படகுகளுக்கு இழப்பீடு வழங்கியது ஏற்புடையது அல்ல. இலங்கை வசம் உள்ள படகுகளை மீட்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

மேலும், தமிழக அரசின் இழப்பீடு அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பல மீனவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *