
கிளிநொச்சி – கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதி எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் கிளிநொச்சி கண்டாவளை பொறுப்பு வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதுடன் கொலை அச்சுறுத்தல் விடுத்த அதே சமயம், இரண்டு வாகனத்தில் சென்ற நபர்களும் அவரை அச்சுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில். முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், விசாரணைகள் தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்றைய தினம் பிற்பகல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் நேரடியாகச் சென்று சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் பிரஜைகள் குழு இன்று பிற்பகல் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியத்துறையில் சேவையாற்றுவதற்கு யாரும் முன்வராத நிலையில் இவ்வாறானவர்கள் மக்களுக்கான சேவைகளை வழங்கும் பொருட்டு வருகை தருகின்ற போதும் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு அவர்களை வெளியேற்றுவதற்கு எடுக்கின்ற முயற்சி என்பது இந்த மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் சிவில் சமூக அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த பிரதான சந்தேக நபர்களை கைது செய்யும் பொருட்டு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த பொலிஸார், சம்பவத்தின் போது கடமையிலிருந்த ஏனையவர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியதுடன், சிசிடி கமரா ஒளிப்பதிகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.