இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து அவதானம்!

இலங்கைக்கும் தனது அரசாங்கத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் சவ்சோக்லு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி அலுலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வர்த்தக நடவடிக்கைகளைப் பல்வகைப்படுத்தல் மூலம் இலங்கையின் பல்வேறு தயாரிப்புகளுக்கு, துருக்கி சந்தைகளில் பரந்தளவிலான வாய்ப்புகள் கிடைக்கும்  என வெளிவிவகார அமைச்சர் இதன்போது   குறிப்பிட்டார்.

இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தமது நாட்டுத் தொழில் முயற்சியாளர்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, துருக்கி ஜனாதிபதியின் வாழ்த்துகளைத் தெரிவித்த மெவ்லூட் சவ்சோக்லு, கடந்த ஆண்டு துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு விடுத்திருந்த அழைப்பை மீண்டும் நினைவுபடுத்தினார்.

இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வழங்கிய பல்வேறு மருத்துவ உபகரணங்கள் உட்பட உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்காகத் துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *