
கொழும்பு, ஜனவரி 29:
கொழும்பு வெளி சுற்று அதிவேக நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை இரண்டு லாரிகள் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா கூறுகையில்
“கொழும்பு வெளி சுற்று அதிவேக நெடுஞ்சாலையில், 16 வது கிமீ போஸ்ட் அருகில், லாரியொன்று டயர் மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த இன்னொரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மோதிய லாரியின் சாரதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து லாரி தீப்பிடித்து எரிந்ததில், பயணிகள் இருக்கையில் இருந்த ஒருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
முதல் லாரியின் சாரதி, அவரது உதவியாளர் வாகனத்தை கவனக்குறைவாக நிறுத்தியதே விபத்துக்கு காரணம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.