
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றையதினம் பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணியானது வட்டுக்கோட்டை தொகுதி முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பேரணியை முன்னெடுத்தவர்களால் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டதுடன் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரேத பெட்டியினை தாங்கியவாறு 13 வேண்டாம் என்பதை குறிக்கும் வகையில் புள்ளியிடப்பட்ட பதாகையைத் தாங்கியவாறு வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

