
யாழ்ப்பாணம், ஜனவரி 29: இந்த அரசு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கான விடயங்களில் பாரபட்சங்களை காட்டாது. எனவே, இந்த அரசாங்கத்தை நம்பி அவர்களுடன் பயணிப்பதன் மூலமே, எமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை விரைவாக பெற்றுக்கொள்ள முடியும் என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நீதிக்கான அணுகல்’ எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை சனிக்கிழமை, யாழ் மத்திய கல்லூரியில் தொடங்கி வைக்கப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் அலி சப்ரி வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரின் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். .
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியது:
வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் நீதித்துறைசார் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வினை வழங்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவையை எமது மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
“காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனானது” என்ற ஒரு அனுபவ வாசகம் உள்ளது. அந்தவகையில் இந்த ‘நீதிக்கான அணுகல்’ நிகழ்வானது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் நீதி அமைச்சர் அலி சப்ரியின் முயற்சியால் அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நீண்டகால வன்முறையால் வடக்கு மக்கள் அதிகளவில் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர் என்பதால் அவர்களது வாசல் படிக்கே, ‘நீதிக்கான அணுகல்’ என்ற இந்த நடமாடும் சேவை வந்துள்ளது. இதை எமது மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.
நீதி அமைச்சர் அலி சப்ரி, ஒவ்வொரு அமைச்சரவைக் கூட்டத்திலும், இது போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரங்களை சமர்ப்பித்து வருவதைக் காண முடிகிறது. கடந்தகால சட்டத்தில் இருக்கக் கூடிய குறைபாடுகளை சரிசெய்யவும், புதிய சட்ட ஏற்பாடுகளை கொண்டுவருவதிலும், காலத்திற்கு பொருந்தக்கூடிய சட்டங்களை உருவாக்குவதிலும் அவர் அயராது உழைத்து வருகிறார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரது வழிகாட்டலில், நாடுதழுவிய ரீதியில் பல்வேறு சேவைகள், மேம்பாட்டுப் பணிகள் பாரபட்சமற்ற வகையில் முன்னெடுக்கப்படுகிறது. 2022 ஆண்டுக்குரிய வரவு – செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட அபிவிருத்தி சார் திட்டங்கள், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் எதிர்வரும் 3 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கான விஷயங்களில் அரசாங்கம் பாரபட்சம் காட்டப் போவதில்லை. இந்த அரசாங்கத்தை நம்பி அவர்களுடன் பயணிப்பதனூடாக எமது பிரச்சினைகளுக்கான தீர்வினை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
அந்தவகையில், மக்கள் தமது பிரச்சினைகளை நம்பிக்கையுடன் கொண்டுசென்று தீர்வைப் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.