
இலங்கையின் உத்தேச புதிய அரசமைப்பில் மாகாணசபை முறைமை முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை முழுமையாக நீக்கப்படுவதோடு அதன் கீழ் தற்போது பணியாற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் பணியாற்றும் துறையின் மத்திய அரச நிர்வாகத்தின் கீழ் மாற்றப்படுவார்கள் எனவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
13ஐ அமுல்படுத்த கோரி ஆறு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அரசு முழுமையாக மாகாணசபை முறைமையை நீக்கவுள்ளதாக அந்த செய்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நகல் வடிவைத் தயாரிப்பதற்கு 14 பேர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை அரசு நியமித்து இருந்தது.
அந்த நிபுணர் குழு நீண்டகால கலந்தாய்வுகளின் பின்னர் நகல் வடிவம் ஒன்றை அரசிடம் கையளித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அந்த நகல் வடிவத்திலேயே மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிரும் மாகாணசபை முறைமை முழுமையாக நீக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.