
இந்தியாவின் கைக்குள்ளேயும், சிங்கள தலைவர்களின் வழிநடத்தலிலும் இங்குள்ள தமிழ் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராக யாழில் இன்று இடம்பெற்ற பேரணியின் பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
34 வருடங்களுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சியை இப்போதும் தூக்கி பிடிக்கும் 11 பேர் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டும்.
இந்தியாவின் கைக்குள்ளே நின்று கொண்டு, சிங்கள தலைவர்களின் நிகழ்ச்சி நிரலிலே, மக்களின் ஆணையை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள், இன்று என்ன செய்கிறார்கள்.
சீனாவை நாம் இங்கே விட மாட்டோம், அதற்கு நாம் உதவுவோம், நீங்கள் இந்த ஒற்றை ஆட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என தமிழ் கட்சிகள் இப்போது கையேந்தி நிற்கின்றனர்.
இந்தியாவுடன் பேரம் பேசியுள்ளனர். மக்களே அடுத்த தேர்தலில் நீங்கள் எமக்கு வாக்களிக்க வேண்டாம்.
ஆனால் 13 ஆம் திருத்தத்துக்கு எதிராக செயற்படுங்கள், 13ஐ ஆதரிப்பவர்களை நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும்.
அந்த 11 பேர் இப்போது என்ன செய்கிறார்கள். மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவோம் என தெரிவித்து பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்.
புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவோம் என தெரிவித்துள்ள தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இவர்கள் நன்றாக முண்டு கொடுக்கிறார்கள்.
ஆனால், நாம் விட மாட்டோம். அனைத்து தமிழ் பிரதேசங்களிலும் இந்த போராட்டம் தொடரும். – என்றார்.