வடக்கு இளைஞர்களே அரசியல்வாதிகளை நம்ம வேண்டாம்: படித்து முன்னேறுங்கள்! – நீதி அமைச்சர் அறிவுரை

அரசியல்வாதிகளுக்கு 13ஐ வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று ஆசை. அவர்களுக்கு சிறையில் வாழும் இளைஞர்கள் பற்றி கவலை இல்லை என்றும், இளைஞர்கள் படித்து முன்னேற வேண்டும். தெற்குடன் நல்ல உறவை பேண வேண்டும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடவியளார்கள் எழுப்பிய கேள்விக்கே நீதி அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கேள்வி : தமிழ் கட்சிகளுடன் நீங்கள் பேச்சு வார்த்தை நடத்துவீர்களா?

பதில் : ஆம். இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் மற்றும் ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசவுள்ளோம். அதே போல முஸ்லீம் தலைமைகளுடனும் நாம் பேசவுள்ளோம்.

கேள்வி : தொடர்ச்சியாக வடக்கு கடல் பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக?

பதில் : நான் நீதி அமைச்சர். இது தொடர்பில் தேவையான கட்டளைகளை வழங்குவேன். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை நாம் எதிர்பார்க்கின்றோம். எமது பிரதமர் இந்தியா செல்வார் அல்லது இந்திய பிரதமர் இங்கே வருவார். இரண்டில் ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

கேள்வி : புதிய அரசியல் அமைப்பு, அடுத்த மாதம் வெளிவரலாம், அதில் மாகாண சபைகள் முறைகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பதில் : அப்படி ஒரு விடயம் எனக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ தெரியாது. அப்படி ஒரு விடயம் நடைபெறவில்லை. இங்குள்ள சிலர் மக்களை தூண்டி விடுவது போல, தெற்கிலிலும் சிலர் உள்ளனர். ஆகவே இந்த விடயங்களை நம்ம வேண்டாம்.

கேள்வி : புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் எந்த நிலையில் உள்ளது?

பதில் : அடுத்த மாதளவில் யாப்பு வரைதல் நிறைவடைந்து ஜனாதிபதியிடம் வழங்கப்படும். மார்ச் ஏப்ரல் மாதளவில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படும்.

கேள்வி : வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு தொடர்பில்?

பதில் : முதலில் போதைப்பொருள் வருகையை தடுப்பதற்காக பாதுகாப்பு பிரிவினரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை கைது செய்து பிரயோசனம் இல்லை. ஆகவே அவர்களை சிகிச்சைக்கு உட்படுத்துகின்றோம். கந்தக்காடு நிலையத்தில் 2,000 பேருக்கு சிகிச்சைகள் வழங்கி வருகிறோம். வடக்கில் காணி வழங்கினால் அதற்கான நடவடிக்கைகளை இங்கே முன்னெடுப்போம்;.

கேள்வி : 13 ஆவது திருத்தும் தொடர்பில்?

பதில் : இங்கே உள்ள அரசியல்வாதிகளுக்கு இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று ஆசை. அவர்களுக்கு சிறையில் வாழும் இளைஞர்கள் பற்றி கவலை இல்லை. நாம் சட்டத்தை சட்டமாக பார்க்க வேண்டும். இதில் திருத்தும் வரும் வராமல் போகும். அது முக்கியமில்லை, பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் அது தான் எமது நோக்கம். இளைஞர்கள் படித்து முன்னேற வேண்டும். தெற்குடன் நல்ல உறவை பேண வேண்டும். இன்றும் காலையில் கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு போய் இருந்தேன். எல்லா மொழிகளிலும் நிகழ்வுகள் மாணவர்களால் நடாத்தப்பட்டது. அது மிகவும் சந்தோசம்.- என்றார்.

பலாலி விமான நிலையம் அரசியல் நோக்கங்களுக்காக மூடப்படவில்லை! – பீரிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *