
ஒரு மாணவன் முன்னேற வேண்டுமானால் கல்வி மிக முக்கியமானது. கல்வி இல்லாமல் ஒன்றும் நடைபெறாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவரும்,அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 2021 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தின நிகழ்வு மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற
அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்லூரி அதிபர் ஆர். ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையகத்தில் தலைநகரில் அமைந்துள்ள ஹைலன்ஸ் கல்லூரி ஒரு சிறந்த பாடசாலை. இந்தப் பாடசாலை சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, இன்று முன்னிலை வகிக்கின்றது.
இதுபோல் இப்பாடசாலை மென்மேலும் சாதனைகள் படைத்து, சிறந்த கல்விமான்களை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதோடு, தனது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதத்தையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் டாக்டர் எஸ்.ரவிவர்மா, பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பொறியியலாளர் ஜீ.எஸ்.பரஜீவன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டதோடு, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் நிகழ்வைச் சிறப்பித்தனர்.