
நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள 12 மாவட்டங்களின் 81 பிரதேச செயலாளர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு டெங்கு பரவும் அபாயமிக்க பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 411 பேர் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கம்பஹாவில் 305 பேரும், களுத்துறையில் 120 பேரும், குருநாகலில் 109 பேரும், புத்தளத்தில் 96 பேரும், காலியில் 83 பேரும், கண்டியில் 73 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 2 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.