
உள்ளூர் சட்டங்களின்படி தடுப்பூசி வலுக்கட்டாயமாக செலுத்தப்படாது எனவும் அனுமதிப் படிவத்தில் கையொப்பமிட்ட பின்னரே தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (30) இடம்பெற்ற இணையத்தள ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜைக்கும் கொரோனா தடுப்பூசியை வலுக்கட்டாயமாக செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னர், பெற்றோரின் அனுமதி பெறப்படும் .
பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களை அவ்வாறான குற்றச்சாட்டுகளை நிறுத்துமாறு தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர், பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளன.
தடுப்பூசி முயற்சியின் வெற்றியினால் க.பொ.த உயர்தரப் பரீட்சை அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை அண்மையில் இடம்பெற்றதாக அவர் கூறினார்.
தடுப்பூசி நடவடிக்கையின் முன்னேற்றத்தின் அடிப்படையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான ஆயத்தங்களை பரீட்சைகள் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
தடுப்பூசியின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதால், தடுப்பூசி தொடர்பான தவறான கூற்றுக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.