இங்கிலாந்தில் 5-11 வயது வரை பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி!

ஐந்து முதல் 11 வயது வரை பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு முதல் கொவிட் தடுப்பூசி அளவை செலுத்தவுள்ளதாக இங்கிலாந்தின் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இதற்கு கூட்டுக் குழுவின் ஆலோசனையின்படி இங்கிலாந்தில் தகுதியான 500,000 சிறுவர்கள் முதல் கொவிட் தடுப்பூசி அளவை பெறுவார்கள் என தேசிய சுகாதார சேவை கூறியுள்ளது.

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை தனது கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை ஐந்து முதல் 11 வயது வரை பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியுள்ளது.

தகுதியான சிறுவர்களில் நீரிழிவு நோய், நோயெதிர்ப்புத் திறன் குறைபாடு, கற்றல் குறைபாடுகள் மற்றும் கொவிட்-19 இலிருந்து அதிக ஆபத்தில் இருக்கும் பிற தீவிர நிலைமைகள் உள்ளவர்களும் அடங்குவர்.

இதுகுறித்து தேசிய சுகாதார சேவையின் தடுப்பூசி திட்டத்தின் துணை முன்னணி டாக்டர். நிக்கி கனானி கூறுகையில், ‘ஒமிக்ரான் மாறுபாடு உட்பட, கொவிட் தொற்றிலிருந்து கடுமையான நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் குறிப்பிடத்தக்க பாதுகாப்பை வழங்குகின்றன என்பதை நாங்கள் அறிவோம். எனவே எங்கள் இளைய மற்றும் மிகவும் ஆபத்தில் உள்ளவர்கள் பாதுகாக்கப்படுவது முக்கியம்.

தேசிய சுகாதார சேவை இப்போது ஆபத்தில் உள்ள 5-11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுகிறது. அவர்கள் அவர்களின் முக்கிய பாதுகாப்பைப் பெறுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதுவரை மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

மேலும், சிறுவர்கள் தடுப்பூசி செலுத்த முன்வருவதை தாமதப்படுத்த வேண்டாம் என்று நாங்கள் பெற்றோரைக் கேட்டுக்கொள்கிறோம். தேசிய சுகாதார சேவை உங்களைத் தொடர்பு கொண்டவுடன், தயவுசெய்து முன்வாருங்கள். இதனால் இளையவர்களை வைரஸிலிருந்து பாதுகாக்க முடியும்’ என கூறினார்.

தேசிய சுகாதார சேவை முன்பு 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளைத் திறந்து, 2.4 மில்லியனுக்கும் அதிகமான முதல் டோஸ்கள் உட்பட, 12-17 வயதுடையவர்களுக்கு 3.5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியதாகக் கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *