புலிகளுடனான யுத்தத்தில் கறுப்புச் சந்தையில் வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு – பசில் வெளியிட்ட பரபரப்பு தகவல்

கறுப்புச் சந்தையில் பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து ஆயுதம் வாங்கியதை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு (தி சண்டே திவயின) வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அதே காலப்பகுதியில் எரிபொருளுக்கு செலுத்துவதற்காக இலங்கை கறுப்புச் சந்தையில் இருந்து டொலர்களைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டார்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எரிபொருள் ஏற்றுமதிக்கு டொலர்கள் தேவைப்பட்டதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு ஏனைய அதிகாரிகளுடன் கொழும்பில் உள்ள புறக்கோட்டைக்குச் சென்று வர்த்தகர்களிடம் டொலர்களை திரட்டியதாகத் தெரிவித்தார்.

இவ்வாறான கொள்வனவுகள் தொடர்பாக இலங்கை அதிகாரிகள் பல வருடங்களாக மறுத்து வந்ததை நிலையில் அவரின் இந்த கருத்து உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதங்கள் உட்பட அணுவாயுத பரிசோதனை காரணமாக ஐ.நா.வின் வர்த்தக தடையை எதிர்கொண்டுள்ள வட கொரியாவிடம் இருந்து தடைகளை மீறி இலங்கை அரசாங்கம் இந்த கொள்வனவை மேற்கொண்டுள்ளதை பசில் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது இலங்கைப் பொருளாதாரம் தனது வெளிநாட்டு கையிருப்பு மீது முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில் உண்டியல் கறுப்புச் சந்தை பண கொடுக்கல் வாங்கல் முறைமை நியாயமானது என்ற வகையிலும் பசில் ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *