
இலங்கை மின் இயந்திர மற்றும் பொறியியல் (SLEME) படைப்பிரிவினால் முதலாவது குண்டு துளைக்காத கவச வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை இராணுவத் தலைமையகமான ஸ்ரீ ஜயவர்தனபுரவில் பாதுகாப்புப் படைகளின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா நேற்று (31) பார்வையிட்டார்.
இலங்கையின் 74வது சுதந்திர தின விழாவையொட்டி இடம்பெறும் ஆயுதப்படை அணிவகுப்பில் இந்த கவச வாகனம் சேர்க்கப்படவுள்ளது.
போர்ச் சூழல்களின் போது ராணுவ வீரர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், காயம் அடைந்த ராணுவ வீரர்களை பாதுகாப்பாக அழைத்து வரவும் இது உதவும்.
பொறியியல் துறையைச் சேர்ந்த 15 குழுக்களின் பங்கேற்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த வாகனம் தீ அல்லது குண்டுத் தாக்குதலை சமாளிக்கும் திறன் கொண்டது.
இதனை இலங்கை மின் இயந்திர மற்றும் பொறியியல் படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் தெரிவித்தார்.
இவ்வாறான கவச வாகனத்தை வெளிநாட்டில் இருந்து கொள்வனவு செய்வதற்கு 2995 இலட்சம் ரூபா செலவாகும்.
ஆனால், இலங்கையில் தயாரிக்கப்பட்ட இந்த குண்டு துளைக்காத இந்த கவச வாகனத்தின் விலை 15 மில்லியன் ரூபா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பத்து இலகுரக குண்டு துளைக்காத வாகனங்களை தயாரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது என்றார்.
இலங்கையில் தற்போது போர்ச்சூழல் இல்லையென்றாலும், நாடு முழுவதும் நிலச்சரிவு, வெள்ளம், தீ போன்ற அவசரநிலைகளுக்கு கணிசமான எண்ணிக்கையிலான ராணுவத்தினரை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது இந்த வாகனம் என்றார்.