
காரைதீவு – வெட்டு வாய்க்கால் சந்தையில் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த காலங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பலொன்று கல்முனை வீதியூடாக பயணித்துக் கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை பின் தொடர்ந்த பொலிசார், காரைதீவு வெட்டுவாய்கால் சந்திக்கு அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்த நிலையில் அவர்களை கைது செய்வதற்கு சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களால் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதான சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பிரதான சந்தேகநபர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த காரில் மறைந்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வாகனத்தில் பயணித்ததாக கருதப்படும் மேலும் சிலர் தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.