இலங்கை அரசின் இரகசிய நோக்கங்களை சுட்டிக்காட்டும் வகையில் மோடிக்கு கடிதம் அனுப்பினோம்! விக்கி எம்.பி விளக்கம்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற பேரில் சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு அற்ற சிங்கள பௌத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக இலங்கை அரசாங்கத்தின் இரகசிய நோக்கங்களை சுட்டிக்காட்டும் வகையில் நரேந்திராமோடிக்கு கடிதம் அனுப்ப தீர்மானித்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரந்த கேள்வி – பதிலிலேயே அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கேள்வி : 7 தமிழ் கட்சிகள் இணைந்து நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியமைக்கும், இப்போது புதிதாக முன்மொழியப்பட்டுள்ள அரசியல் யாப்பிற்கும் எதாவது தொடர்புள்ளதா?

ஆம் நிச்சயமாக. வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பேசும் மக்களுக்கு புதிய அரசமைப்பில் சாதகமான மாற்றங்களை நாம் எதிர்பார்க்கவில்லை. 1972ஆம் ஆண்டு மற்றும் 1978ஆம் ஆண்டு ஆகிய இரண்டு அரசியலமைப்புகள் மீதான விவாதத்தின் போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முறையாக எதிர்க்கவும் புறக்கணிக்கவும் மட்டுமே முடிந்தது.

ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத அரசியலமைப்பு ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை தடுக்கக்கூடிய முடியவில்லை.

இம்முறையும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல் அவர்களின் நலன்களுக்கு விரோதமான அரசியலமைப்பை நிறைவேற்றும்.

1978ஆம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியலைப்பு, இன்று தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கும் ஒரே ஒரு நன்மை பதின்மூன்றாவது திருத்தமாகும்.

1987 ஆம் ஆண்டு மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தி வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் தமிழர்களுக்கு அரசியல் நன்மைகளை வழங்குவதற்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மாகாணசபை முறையை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு விரும்பினார்.

இப்போது அவர்கள் மாகாண சபைகளை வெள்ளை யானை என குறிப்பிடுகிறார்கள். சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் அவ்வாறு இருக்கலாம். ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், 13ஆவது திருத்தச்சட்டம் மாத்திரமே அரசியல் ரீதியாக அவர்களை பிரதிபலிப்பதற்கு கிடைத்துள்ள ஒரே வாய்ப்பு.

இந்த திருத்தச் சட்டத்தை அகற்றுவது என்பது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நாம் இந்த நாட்டின் வெறும் சிறுபான்மை இனமாக மாத்திரம் ஆக்கப்படும் செயல்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை தமிழ் பேசும் மக்களே. ஏழு மாகாணங்களில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள மக்களோடு ஒப்பிடும் போது இந்த இரண்டு மாகாணங்களில் பெரும்பான்மை மக்கள் மொத்த இலங்கையின் சிறுபான்மை இனங்கள் ஆக்கப்படுகின்றனர்.

கி.பி. ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் உருவாகிய சிங்களமொழி பேசும் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் ஒப்பிடும் போது, தமிழர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டுள்ளனர்.

அவர்கள் புராதன மொழியை பேசுவதுடன் தீர்மானிக்கக் கூடிய ஒரு தாயகத்தை கொண்டுள்ளனர். பெரும்பான்மை சிங்களவருடன் ஒப்பிடும் போது வித்தியாசமான சமய கலாச்சாரங்களை பின்பற்றுகின்றனர். சர்வதேச விதிகளின்படி தமிழர்கள் சுயநிர்ணயத்திற்கு உரித்துடையவர்கள்.

வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு முழுமையான அதிகாரப்பகிர்வை வழங்காமல், ஒற்றையாட்சி சட்டத்தில் இருந்து பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்கினால், தமிழர்களுக்கு உரித்தானது எனக் கூறக்கூடிய எந்த ஒரு உறுதியான சட்ட அதிகாரமும் இன்றி இருக்கும் நிலை ஏற்படும்.

வடக்கில் தவறான சில திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டாத சக்திகள் மேற்கொண்ட பல முயற்சிகளை வடமாகாண முதலமைச்சர் என்ற வகையில், என்னால் தடுக்க முடிந்தது.

வடக்கு, கிழக்கு மக்களைப் பொறுத்த வரையில் மாகாணசபை கணிசமான அளவு பலவீனமாகவும், வினைத்திறனற்றதாகவும் இருந்தாலும், ஏனைய இடங்களில் உள்ள பெரும்பான்மையான சிங்களம் பேசும் மக்களுக்கு எதிராக தமிழ் பேசுபவர்கள் என்ற சட்ட அங்கீகாரத்தை வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்குகின்றது.

மாகாணசபைகளை நீக்கிவிட்டால் இலகுவாக முழு நாட்டிலும் தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மக்கள் சிறுபான்மை இனம் என ஒடுக்கப்பட்ட முடியும். ஒரே நாடு ஒரே சட்டம் எனும் கருத்தாக்கம், புதிதாக அறிமுகம் செய்யப்படும் அரசியலமைப்பிலிருந்து மாகாணசபையை நீக்குவதற்கான ஒரு முன்னோடி திட்டமாக கருதப்படுகிறது.

சிங்கள நாளிதழ் ஒன்றில், புதிதாக அமல்படுத்தப்படும் அரசியல் அமைப்பின்படி மாகாணசபை அமைப்பை நீக்குவது அதன் உள்ளடக்கம் என குறிப்பிடப்பட்டிருந்த போதும் சிங்கள அமைச்சர்கள் இதனை மறுக்கின்றனர்.

ஆனால் இதனை நாம் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதும்போது முன்கூட்டியே ஊகித்து இருந்தோம். புதிய அரசியல் அமைப்பின் நோக்கம் முழுமையாக மாகாணசபை முறைமையை நீக்கி இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாதவாறு செய்வது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது இந்தியா இலங்கைக்கு உதவாமல் விட்டிருந்தால் இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவிதமான தீங்கும் ஏற்பட்டிருக்கக் கூடும். அந்த சமயத்தில் இலங்கைக்கு இந்தியாவிடம் உதவி கோருவதை விட வேறு எந்த வழியும் இருக்கவில்லை. இலங்கை சீனாவின் உள்நோக்கங்களை அறிந்துள்ளது. இந்தியா அதன் பங்கிற்கு தமிழர்கள் சார்பில் கைச்சாத்திட்டுள்ளது. அந்த சமயத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ அல்லது டவவந உறுப்பினர்களோ கையெழுத்திடவில்லை.

அந்த வகையில் இப்போது, இலங்கை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் சிங்கள பௌத்த பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்கும் போது வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் சார்பாக தலையிடுவதற்கு இந்தியாவுக்கு சட்டரீதியான உரிமையும் தார்மீகக் கடப்பாடும் உள்ளது.

நாங்கள் 13ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு கேட்பது, தமிழர்களாக அதிக அதிகாரம் கிடைக்கும் எனும் காரணத்திற்காக அல்ல. மாறாக இந்தத் திருத்த சட்டம் இல்லாவிட்டால் தமிழர்களுடைய அதிகாரம் முழுதுமாக சுரண்டப்பட்டு விடும் என்பதால்.

இந்த திருத்த சட்டத்தை முதலாவதாக அறிமுகப்படுத்திய போது விவாதத்தில் ஈடுபட்ட தரப்புகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளதால், வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் பேசுவதற்கு நாம் இந்தியாவை கேட்க முடியும்.

வடக்கு மற்றும் கிழக்கைப் பொறுத்த வரையில் இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக மாகாண சபைகளை நீக்க முடியாது. பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கேட்பதன் மூலம் எமது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நாங்கள் தேடவில்லை. மாறாக ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் மாகாணசபைகள் இருக்க வேண்டும் எனவே நாங்கள் கேட்கிறோம்.

நாங்கள் கேட்கும் நிரந்தர தீர்வு என்பது, கூட்டாட்சியே. அதற்கு குறைவான வேறெதுவும் அல்ல. இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கும் தார்மீகக் கடமை உள்ளது.

மேலும் பூர்வீக குடி மக்கள் கொடுமைப்படுத்தப்படும் போதும் பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படும் போதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க முடியாது. Pவுயு மேற்கொண்டு தொடர்வது அரசாங்கத்தின் அமைப்புகளை காட்டுகிறது.

இந் நிலையிலேயே, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பேரில் சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு அற்ற சிங்கள பௌத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக இலங்கை அரசாங்கத்தின் இரகசிய நோக்கங்களை சுட்டிக்காட்டும் வகையில் நரேந்திராமோடிக்கு கடிதம் அனுப்ப தீர்மானித்தோம்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *