
கலேவல – வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞரொருவர் மீது யுவதியின் உறவினர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக கலேவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி ஹொரவ்பொத்தானை பிரதேசத்திலிருந்து இரண்டு வருடமாக பழகிய யுவதி வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததையடுத்து பார்வையிட சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அங்கு யுவதியின் உறவினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தனது தலை முடியை வெட்டி தனக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்து ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹொரவ்பொத்தானை – நிக்கவௌ சேர்ந்த 19 வயதுடைய கபூர் முகம்மட் சாகீர் என்பவரே தாக்குதலுக்கு உள்ளார்.
குறித்த தாக்குதல் நடத்தியவர் பெண்ணின் தந்தை எனவும், அவருடன் பக்கத்து வீட்டார் இருவரும் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்தார்.
இது தொடர்பில், தாக்குதல் நடாத்திய குறித்த யுவதியின் தந்தை தெரிவிக்கையில், இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு வந்து குறித்த நபர் கதவை தட்டியதாகவும், இதனாலேயே தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.