இரவு…

இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு முதியவரை தூங்க விடாமல், நண்பர்களுடன் ‘பப்ஜி’ விளையாடி இடையூறு செய்து வந்த வாலிபரின் கையை முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் பல நூறு பேர் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு ஆன்லைனில் விளையாடும் விளையாட்டு பப்ஜி. முழுக்க முழுக்க துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களுடன் தங்களை வீரர்களாக உருவகப்படுத்திக் கொண்டு தங்கள் எதிரியை அழிக்க தனியாகவோ நண்பர்களுடனோ போராடும் வன்முறைகள் நிறைந்த விளையாட்டு.

பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட்போனிலேயே கழிக்கும் சிறுவர்கள் இந்த விளையாட்டுக்கு தொடர்ந்து அடிமையாகி வருகின்றனர். பேட்டரி முழுவதும் தீர்ந்துபோகும் வரை மட்டுமல்லாமல் பவர்பேங்க் அல்லது சார்ஜரில் போட்டுக்கொண்டே விளையாடும் அளவுக்கு அடிமையாகியிருக்கிறார்கள். 

நள்ளிரவில் ‘கொல்லு, சுட்டுத்தள்ளு’ என்ற வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டு விளையாடி வருவதாக பல பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விளையாட்டில் தோல்வி அடைந்துவிட்டால் விரக்தியின் உச்சத்துக்கு செல்லும் சிறுவர்கள் செல்போனை அல்லது வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பது, ஆக்ரோ‌ஷமாக நடந்துகொள்வது, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வது முதல் தற்கொலை முயற்சி வரை செல்கின்றனர்.

இந்தநிலையில் திருப்பூரில் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு முதியவரை தூங்க விடாமல், நண்பர்களுடன் ‘பப்ஜி’ விளையாடி இடையூறு செய்து வந்த வாலிபரின் கையை முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய

விவரம் வருமாறு:-
திருப்பூர் முருகம்பாளையம் பாறைக்காட்டை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 19). தாராபுரத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டுக்கு அருகே உள்ள துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கார்த்திக் தனது நண்பர்களுடன் அடிக்கடி ‘பப்ஜி’ விளையாடுவது வழக்கம்.

சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் நண்பர்களுடன் அமர்ந்து கார்த்திக் ‘பப்ஜி’ விளையாடினார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ராமசாமி(65) என்பவர் தூங்குவதுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சத்தம் போட்டார். இதனால் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து கார்த்திக்கை வெட்டினார். இதில் அவரது கையில் வெட்டு விழுந்தது. காயமடைந்த கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி ராமசாமியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமசாமி, ஒரு கொலை வழக்கு தொடர்பாக தண்டனை அனுபவித்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி SHORTNEWS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *