
கொழும்பு, பெப் 2: சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் இணைந்து தடுப்பூசிப் பணிகளை விரைவுபடுத்தாவிட்டால், நாடு மீண்டும் ஒரு தடவை முடக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக GMOA பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே கூறுகையில் “கொரோனா பரவலுக்கு எதிரான மூன்றாவது பூஸ்டர் டோஸ் மருந்தைப் பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அரசு வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் சரிவரப் பின்பற்றாத நிலை நிலவுகிறது.
மக்கள் அனைவரும் மூன்றாவது பூஸ்டர் டோஸை பெற்றுக் கொள்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். கொரோனாவின் அபாயம் தொடர்பான தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால், கடந்த சில வாரங்களாக நாட்டில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதுடன், கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
அரசு, தனியார் துறை நிறுவனங்களில் கூட சுகாதார வழிகாட்டுதல்கள் சரிவரப் பின்பற்றப்படவில்லை. மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர மற்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. நாட்டில், இன்னொரு கொரோனா அலை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை, அரசு, தனியார், மருத்துவ துறையினர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாட்டில் தடுப்பூசிப் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் இணைந்து தடுப்பூசிப் பணிகளை விரைவுபடுத்தாவிட்டால், நாடு மீண்டும் ஒரு தடவை முடக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.