புதிய காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்படக் கூடிய இடங்களை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

மன்னார், ஜனவரி 3: புதிய காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்படக் கூடிய இடங்களை அடையாளம் காணுமாறு மின்சார சபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

மன்னாரில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை பார்வையிட்டார்.

இது தொடர்பாக இலங்கை மின்சார சபை மூத்த அதிகாரி கூறுகையில் ” ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையத்தின் பணிகள் தொடர்பாக ஜனாதிபதி கேட்டறிந்தார் . மேலும், புதிய காற்றாலை மின் நிலையங்களை அமைக்கக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அது தொடர்பாக உடனடியாக அறிக்கை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.

தற்போது காற்றாலை மின் நிலையங்கள் மூலம் 248 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படுகிறது. இதன் அளவை அதிகரிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்தினார். தம்பபவனி காற்றாலை மின் நிலையத்திலிருந்து மேலும் 50 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

மின்சாரம் மூலம் நாட்டை வலுப்படுத்துதல், நிலையான மின்சாரம் வழங்குதல் ஆகிய நோக்கத்துடன் “தம்பபவனி” காற்றாலைத் திட்டம் 2014 இல் ஆரம்பிக்கப்பட்டது. 150 ஹெக்டேர் நிலப்பரப்பில், மன்னார் கடற்கரையிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த மின் நிலையம் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *