ராகம மருத்துவபீட விவகாரம்; மேலும் வெளியான தகவல்கள்

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட கும்பலால் ராகம மருத்துவபீட மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று (02) காலை ராகம மருத்துவ பீட விடுதிக்குள் புகுந்த கும்பலொன்று தாக்குதல் நடத்தியதில் நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய கும்பல் வந்த கார் கைப்பற்றப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் கீழ் உள்ள தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காரே கைப்பற்றப்பட்டுள்ளது.

ராமக மருத்துவபீட மாணவர்கள் காரை கைப்பற்றி, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

தாக்குதல் கும்பலில் ஒருவரின் பணப்பை மருத்துவ பீட விடுதியில் கிடந்ததாகவும், அது இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் தனிப்பட்ட ஊழியர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் பெயரில் வழங்கப்பட்ட அடையாள அட்டையும் பணப்பையில் காணப்பட்டது.

தாக்குதலில் காயமடைந்த மூன்று மருத்துவ மாணவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றுமொரு மருத்துவ மாணவர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ராகம மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவர் ஒருவருக்கும் நான்காம் வருட மாணவர்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த மோதலில் முடிந்துள்ளது.

இந்த தர்க்கத்தை தொடர்ந்து, மூன்றாம் வருட மாணவன் நேற்று அதிகாலை 1.00 மணியளவில் குண்டர்களுடன் ராகம மருத்துவ பீட மாணவர் விடுதி வளாகத்திற்கு வந்துள்ளார்.

சுமார் 15 பேர் கொண்ட கும்பல் கார் மற்றும் வான் ஒன்றில் வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அப்போது அந்த கும்பல் நான்காம் ஆண்டு மாணவர்களை விடுதிக்கு வெளியே அழைத்து வந்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தில் மூன்றாம் வருட மாணவனையும் நான்காம் வருட மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்ற போது மாணவர்கள் வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், ராகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.

தாக்குதல் குழுவில் இருந்த ஒருவரையும், அரச அமைச்சின் கார் ஒன்றையும் மருத்து மாணவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஏற்கனவே பல சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைப் பிடிக்க விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் நேற்று காலை ராகம மருத்துவ பீடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

தாக்குதலின் போது மருத்துவ பீட விடுதிகளைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்தியும், மருத்துவ மாணவர்களின் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்த காட்சிகளைப் பயன்படுத்தியும் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது பணியாளர்களோ, தனக்கு கீழிருக்கும் தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்களோ இந்த சம்பவத்தில் தொடர்புபட்டிருந்தால் அவர்கள் மீது பாரபட்சமின்றிய நடவடிக்கையெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *